2008ஆம் ஆண்டு ஜனவரியின் இதேநாள். இந்த நேரம் அதிர்ச்சியான அந்தச் செய்தியைக் கேள்வியுற்றிருந்தோம். இலங்கையின் பிரதான ஆங்கில வார இதழ்களில் ஒன்றான சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு விட்டார் என்பதே அந்தச்செய்தி.
8ஆம் திகதி காலையில் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் புறப்பட்டுள்ளார் லசந்த. வீட்டிற்கு வெளியே அநாவசியமாக ஓடித் திரிந்த சில மோட்டார் சைக்கிள்களை அவதானித்த லசந்தவின் துணைவியும் சக ஊடகவியலாளருமான சொனாலி சமரசிங்க லசந்தவைத் தனியே போகவேண்டாம் என்று தடுத்திருக்கிறார்.
எனினும் லசந்த இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இவ்வாறான அச்சுறுத்தல்கள் லசந்தவுக்கு புதிதான ஒன்றாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல இலங்கையின் ஊடகத்துறையே நாளாந்தம் இவ்வாறான அச்சுறுத்தல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது என்பதுவும் அவ்வாறான நெருக்கடிகளுக்குள் தான் ஊடகவியலாளர் பணியாற்றும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருந்ததுமான காலம் அது. அவர் தனது வீட்டிலிருந்து அத்திடிய வீதி ஊடாக அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கையில் அவரை நான்கு மோட்டார் சைக்கிள்கள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
அதனை அவதானித்த அவர் தனது கைத்தோலைபேசியூடாக சில நபர்கள் தன்னைப் பின்தொடர்வதை தெரிவித்திருக்கிறார். அவர்கள் கறுப்பு தலைக்கவசமும் கறுப்பு உடையும் அணிந்திருந்தனர். அத்திடிய பேக்கரிச் சந்தியை அவர் அடையும் போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அவரது காரை முந்திச் சென்று காருக்கு குறுக்காக வந்தன. இதனால் உடனடியாகவே லசந்த பிரேக் போட்டு காரை நிறுத்தியிருக்கிறார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரின் முன் பக்கக் கண்ணாடியை அடித்து நொருக்கிவிட்டு லசந்தவின் தலையில் தாக்கியிருக்கிறார்கள். தாக்கியவர்கள் உடனடியாகவே அவ்விடத்தை விட்டு மோட்டார் சைக்கிளுடன் மறைந்து விட்டார்கள். தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி சுயநினைவிழந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த லசந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |