நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள் என விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது:
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தோம். இக் கருத்துப்பரிமாற்றம் 5.02.2010 வரை இடம் பெற்றபின் மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி 10ம் திகதியளவில் அறிக்கை முழுமைப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துப் பரிமாற்றங்களையும், அதற்குரிய கலந்துரையாடல்களையும் நாம் இப்போது நடத்தி வருகிறோம்.
இதுவரை கிடைத்துள்ள கருத்துக்கள் இவ் அறிக்கையினை மேலும் செழுமைப்படுத்தத் துணைபுரிபவையாக உள்ளன. மேலும் கூடுதல் பங்களிப்பை வழங்குவதற்காக கருத்துப் பரிமாற்றக்காலத்தைச் சற்று நீடிக்குமாறும் எமக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன. அதற்கமைய கருத்துப் பரிமாற்றக்காலத்தை 15.02.2010 வரை நீடிப்பதென முடிவு செய்துள்ளோம்.
மக்களிடமிருந்து வரும் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கையினை முழுமை செய்யவென எமது மதியுரைஞர்குழு பெப்ரவரி மாதம் 20-22 திகதிகளில் கூடவுள்ளது. இம் மாதம் இறுதிப்பகுதிக்குள் அறிக்கை முழுமைப்படுத்தப்படும்.
இச் சந்தர்ப்பத்தில் சகல தமிழர் அமைப்புக்களுக்கும் ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.
உங்கள் அமைப்புக்களின் நிகழ்ச்சிநிரலில் இவ் அறிக்கையினை எடுத்து, அதனை ஆராய்ந்து இவ் அறிக்கையினை மேலும் செழுமைப்படுத்த உதவக்கூடிய வகையிலான தங்கள்; கருத்துக்களை எமக்கு அனுப்பி வைக்குமாறும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது செயற்திட்டத்திற்குத் தங்கள் ஆதரவினை வழங்க முன்வருமாறும் அன்புடன் கோருகிறோம்.
நாம் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து தெரிவித்து வருவது போல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை இவ் வருடம் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
- சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்குத் தேர்தல் நடைபெறவுள்ள அதே மாதத்தில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யத் தேர்தல்களை நடத்துவதே உலகுக்குத் தெளிவான ஒரு அரசியல் செய்தியைக் கூறும்.
- மேலும் இத் தேர்தல்கள் திட்டமிட்டவாறு நடந்தேறும் பட்சத்தில் மே மாதம் 17-19ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டுவடிவிலான பதிலடியாக அமையும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியில் தம்மைத் தொண்டர்களாக பலர் இணைத்து வருகிறார்கள். இவர்களை நாம் எமது தொண்டர் விபரப்பட்டியலில் சேர்த்து வருகிறோம். எமது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள் இவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தித் தமது பணிகளில் இணைத்துக் கொள்ளும். நாம் திட்டமிட்டுள்ளவாறு தேர்தல்களை ஏப்ரல் மாதத்தில் நடத்தி முடிப்பதற்கு மேலும் பெரும் தொகையான தொண்டர்கள் எமக்குத் தேவைப்படுகின்றனர். இதனால் ஆர்வமுள்ள அனைவரையும் எமது இணையத்தளத்தினூடாகவோ நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்களுக்கூடாகவோ தம்மைத் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்விடத்தில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியொன்று தொடர்பாகவும் எமது கருத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் தற்போது புதிதாக உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மக்கள் அவைகளுக்குமான தேர்தல்கள் பற்றியதே இக் கேள்வி.?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்தரீதியில் தமிழீழ விடுதலையினை வென்றெடுப்பதற்கான முன்னெடுப்பாக, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. நாமறிந்த வரையில் மக்கள் அவைகள், இதே இலக்கினைக் கொண்டவையாக, சில நாடுகளில், நாடு சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக, இவற்றுக்கான பிரதிநிதிகளை அந்தந்த நாட்டு மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உருவாக்கப் படுகின்றன. இதனால் இவ்விரு அமைப்புக்களை உருவாக்குவதற்கு சில நாடுகளில் இரு நேரடித் தேர்தல்களை நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
- இது பற்றி ஆரம்பம் முதல் எமது நிலைப்பாடு என்னவெனில் இவ் இரு தேர்தல்களையும் நடத்த வேண்;டியுள்ள நாடுகளில் இவற்றை ஒரே நாளில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடத்துவது நன்மையானது என்பதே. இது நடைமுறைச் சாத்தியமானதும் கூட. தேர்தல்கள் இவ்வாறு ஒழுங்கு செய்யப்படுமாயின் மக்கள் தங்கள் நாடுகளில் நடைபெறும் இரு தேர்தல்களிலும் ஒரே நாளில், ஒரே வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதன் மூலம் இரு அமைப்புக்களுக்குமான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கென ஒரு வாக்குச்சீட்டும் மக்கள் அவைக்கென இன்னுமொரு வாக்குச்சீட்டுமாக இரு வேறுபட்ட வாக்குச்சீட்டுகளில் மக்கள் வாக்களித்து, இரு வேறுபட்ட வாக்குப்பெட்டிகளில் அவற்றை இடக்கூடிய வகையில் இதனை ஒழுங்கு செய்யலாம். இவ்வாறு தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவோமாயின் கூடுதலான மக்கள் இதில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். மக்களிடையேயும் குழப்பங்கள் ஏற்படாது. தேர்தல்களில் செலவிடப்படும் மக்கள் பணத்தையும் குறைத்துக் கொள்ளலாம். இரு தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்தும் திட்டத்தினை நாம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம்.
- ஏப்ரல் மாதத்தில் நாடு கடந்த அரசாங்கத்திற்கான தேர்தலை கனடாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வந்த வேளையில் மக்கள் அவைக்கான தேர்தல் மார்ச் 27 இல் நடைபெறும் என அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு வேறுபட்ட நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் மக்கள் அவைக்கும் தேர்தல் நடைபெறும் சூழல் கனடாவில் உருவாகிறது. தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. இவ்விரு தேர்தல்களையும் ஒரேநாளில் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வாய்ப்புக்கள் இன்னும் உண்டெனவே நாம் நம்புகிறோம்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தமிழீழ விடுதலை இலட்சியத்தினை வென்றடையும் நோக்குடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியவை. மக்கள் அவைகளோடு மட்டுமன்றி தமிழர்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார அமைப்புக்களோடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணைந்து தான் செயற்படவேண்டும்.
- நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசமாக இணைந்து நிற்போமாயின் தமிழீழ தேசத்தின் விடுதலையை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது. நாம் திட்டமிட்டுள்ளவாறு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்களை நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை மே மாதம் 17-19 காலப்பகுதியில் கூட்டுவதற்கு உறுதுணையாகச் செயலாற்றுமாறு அனைத்துத் தேசிய சக்திகளையும் உரிமையுடன் கோருவதோடு, இம் முயற்சியின் வெற்றிக்குத் தோளாடு தோள் நிற்குமாறு தமிழ் பேசும் மக்களையும் ஊடகங்களையும் வேண்டுகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://govtamileelam.org/gov/ |