இவ்வளவு காலம் நாம் அனுபவித்ததை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள் - தென்னிலங்கை நோக்கி வட இலங்கை ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
- மகிந்தாவின் வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தெரியவந்தது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரதூரமான தாக்குதலாகும். இந்த நிலைமையை மாற்றத் தவறினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாரதூரமான ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கருத்து கூறும் உரிமையைப் பாதுகாக்க அணி திரள்வோம் என்ற தலைப்பில் தகவலை அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தலையிடுமாறு மக்களிடம் வேண்டிக்கொள்வதாக அந்த ஊடகவியலாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன. நாட்டில் கருத்து கூறும் சுதந்திரத்தையும் மக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் இந்த செயற்பாடுகள் பெரும் தடையாக அமைந்துள்ளன. இந்த ஒடுக்குமுறையானது ஊடகவியலாளர்களின் உயிருக்குக் கூட அச்சுறுத்தலாக மாறிவருகிறது. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.
இதுவரை அவர் குறித்த எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் உள்ளிட்ட பல இணையத்தளங்களுக்கு பலமுறை தொழில்நுட்பத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இவை அரசாங்கத்தின் அனுசரணையோடு இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல், இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் அடிக்கடி இணையத்தள ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரச ஊடகங்களில் பணியாற்றும் மாற்றுக் கருத்துக்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் பெரும் இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
அதேபோல் அரச விரோத சதித் திட்ட குற்றச்சாட்டின் பேரில் பல ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர் விலக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒன்பது ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இதனைத்தவிர மேலும் 21 பேர் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் லக்ஹன்ட வானொலியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடைய+றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சிரச ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் அண்மைக்காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர். மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளவர்களுக்கெதிராக அரசாங்கம் ஆரம்பித்துள்ள ஒடுக்குமுறையின் ஒருபகுதியாகவே இந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தின சிறிமல்வத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் விசேட தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் அரசாங்கம் லங்கா பத்திரிகைக்கு எதிராக பாரிய சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்ததுடன் அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதக் குழுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தேசிய ரூபவாஹினி மற்றும் அரச ஊடகங்கள் வழியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
லங்கா பத்திரிகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் விலக்கிய போதிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று பல்வேறு வகையிலான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டுள்ளன.
அத்துடன் லங்கா பத்திரிகை முகவர்களை அச்சுறுத்தி அதனூடாக பத்திரிகை விநியோகத்தைத் தடுக்கும் நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என அடக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை
இவ்வளவு காலம் நாம் அனுபவித்ததை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள் - தென்னிலங்கை நோக்கி வட இலங்கை ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
நீண்ட காலமாக சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம், நாடு முழுவதுமாக இயல்பு வாழ்க்கை திரும்பி சட்டமும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்ட வேண்டுமென மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளோம் என வடஇலங்கை பத்திரிகையாளர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களது அறிக்கையின் முழு விபரம்:
தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கு எதிராகவும், எதிர் கருத்துடையவர்களுக்கு எதிராகவும் அதிகரித்திருந்த வன்முறைகளு வடஇலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த கவலையடைவதுடன் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

நீண்ட காலமாக சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம், நாடு முழுவதுமாக இயல்பு வாழ்க்கை திரும்பி சட்டமும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்ட வேண்டுமென மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
தேர்தல் தினத்தன்று குடாநாட்டில் இடம் பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் யுத்த காலகட்ட நினைவிற்கு தூக்கிச் சென்றதுடன். வன்முறைகள் அதிகமாக இருக்கலாம் என்ற பீதியை ஊடகவியலாளார்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தது. இத் தேர்தலில் சற்று ஆர்வம் காட்டியிருந்த மக்கள் சற்றுபின்வாங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஏனெனில் கடந்த காலங்களில் எந்த ஒரு தேர்தலையும் தமிழ் மக்கள் சமாதானமா? போரா? என்ற அடிப்படையிலேயே நோக்கிவந்தனர், யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இக் கருத்து வாழ்க்கையா? களியாட்டமா? என்ற நிலைக்கு மாற்றமடைந்தது.
கடந்த யுத்த காலங்களில் ஏற்பட்ட சொத்து இழப்புக்கள், இழந்த குடியிருப்புக்கள், மற்றும் உறவினர்களின் (காணாமல்போனோர்) நிலைமைகள் தொடர்பான கவலை மக்களை சூழ்ந்திருந்தமையினால், அமைச்சர்களின் வருகையும், மற்றும் வேலைத்திட்டங்களையும் தமிழ் ஊடகங்கள் என்றுமில்லாதவாறு முக்கியமாக கருதின. இதனால் மற்றைய கட்சிகளின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடைவதற்கான பொறுப்பிலிருந்து குடாநாட்டு ஊடகவியலாளர்கள் சற்று விலகியே நின்றனர் என கூறலாம். வார்த்தை பிசகினால் 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்றபட்டுவிடும்' என சிந்திக்கும் பொறுப்புள்ள ஊடகவியலாளன் 'உயிர் பிரிந்துவிடும்' என சிந்திக்கும் நிலையிலும் தமக்கான பணிகளை செய்யத் தவறவுமில்லை.
எனினும் தேர்தல் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களை மக்களும் வெளியிடுவதற்கு அச்சப்பட்ட நிலையில் தயங்கி நின்றனர்.
தவிரவும் தேர்தல் தினத்தன்று சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும்? தொகுதிகளுக்கும் சென்று (போக்குவரத்து, சோதனை நடவடிக்கை) நிலைமைகளை பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் குடாநாட்டு நிலைமையில் கடிணமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு பொருமையையும் புகழ்ச்சியையும் தேடித்தந்த குடா நாட்டு ஊடகத் துறை நீண்ட வரலாற்றையும் சிறந்த அறிவாளிகளையும் கொண்டிருந்த நிலைமையிலிருந்து எவ்வளவு தூரம் பின்தங்கி விட்டது என்பதை சட்டென உணர்த்தும் விதமாக இத் தேர்தல் காலம் அமைந்தது என சுருக்கமாக கூறவிரும்புகின்றோம்.
சுமார் 15 ஊடகவியலாளர்களை குடாநாட்டு ஊடகத்துறை ஆயுதமுனையில் இழந்ததுடன் அனுபவமிக்க சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுமுள்ளனர்.
எனவே அதிகப் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி அவர்கள் கடந்த காலங்களில் ஊடகத்துறை மீதான வன்முறைகள் தொடர்பாக ஏற்பட்ட குற்ற சாடடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிறுவனங்கள்,பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் கருத்துக் கூறுவதற்கு அச்சப்படும் நிலையை மாற்றி அமைக்க பாடுபடும் குடாநாட்டு ஊடகத்துறையினருக்கு, தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஆதரவளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
லங்க நியூஸ்பேரின் சிறிய கால தடைக்கு வருந்துவதுடன் அதன் ஆசிரியர் சந்தன ஸ்ரீமல்வத்த மிக விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்டுவார் என நம்புகின்றோம்.
நாங்கள் நீண்ட காலமாக அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்கிறீர்கள், வட இலங்கை மக்கள் நீண்ட காலமாக உரிமைமீறல் சம்பவங்களையும், வன்முறைகளையும் அனுபவித்துவருகின்றோம்.
அதேவேளை எமது ஊடகத்துறையினரும் கடந்த காலங்களாக அடக்கு முறைக்கு முகம் கொடுத்தவர்களாகவும் உள்ளோம். எமது சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம் என்பதை தென்பகுதி மக்களுக்கு கூறிக்கொள்கின்றோம். |